சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.
இந்த முகாமில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாற்றுத் திறன் மாணவர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அடையாள அட்டை, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை தவறாமல் எடுத்துவர வேண்டும்.
இந்த முகாம் தொடர்பாக, குமராட்சி கடை வீதியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரா.பாலமுருகன் தலைமையில், கல்வி அலுவலர்கள் தமிழ்மணி, ஜெயக்குமார், ஜான்சன், ராஜசேகர், ஆசிரியப் பயிற்றுநர்கள் க.முருகானந்தம், தா.மல்லிகா, கு.பாலசுப்பிரமணியன், அருள்ஜோதி வள்ளலார், ஸ்டாலின் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.