சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத் துறை மற்றும் கல்லூரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் ஆகியவை இணைந்து, "தில்லை நீயூரோகான் 2019' என்ற நரம்பியல் மாநாட்டை அண்மையில் நடத்தின.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் தொடக்க விழாவுக்கு அதன் துணைவேந்தர் வே.முருகேசன் தலைமை வகித்து உரையாற்றினார். துணைவேந்தரின் மருத்துவ ஆலோசகர் என்.சிதம்பரம், மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.யு.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், சேலம் சிம்ஸ் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் என்.பாலமுருகன், மதுரை அப்பலோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் ச.மீனாட்சிசுந்தரம், நரம்பியல் நிபுணர் ம.பாரதிசுந்தர், சென்னை வானகரம் அப்பலோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பி.ஆர்.பிரபாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டின் சிறப்பம்சமாக பக்கவாதம் பற்றிய பயிற்சி பட்டறை நடைபெற்றது. மாநாட்டில், தமிழகம் முழுவதிலும் இருந்து 350-பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை தலைவர் எம்.செந்தில்வேலன், பேராசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்த மாநாடு அகில இந்திய மருத்துவக் குழுமம் மற்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.