பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ. 15.56 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
By DIN | Published On : 28th March 2019 09:23 AM | Last Updated : 28th March 2019 09:23 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ. 15.56 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான நடந்தை விதிகள் மார்ச் 10 -ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, நடத்தை விதிகளை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் கடலூர் மாவட்டத்தில் 63 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்வதைக் கண்காணித்து அதைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி, மார்ச் 26 -ஆம் தேதி வரை மாவட்டத்தில் ரூ. 1.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பணம் பறிகொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிய அளவிலான வியாபாரிகள், சாதாரண பொதுமக்களவார். எனவே, உரிய ஆவணங்கள் சமர்பித்தால் பணம் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலர் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் மார்ச் 26 -ஆம் தேதி வரை ரூ.1.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உரிய ஆவணங்கள் வழங்கியதால் கைப்பற்றப்பட்ட பணம் ரூ. 15,56,350 திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், மாவட்ட கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகியோரிடம் சமர்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...