வள்ளலார் தெய்வ நிலையத்தில் இலவச அக்கு பஞ்சர் சிகிச்சை
By DIN | Published On : 30th March 2019 08:44 AM | Last Updated : 30th March 2019 08:44 AM | அ+அ அ- |

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இலவச அக்கு பஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு நாற்தோறும் திரளானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள தரும சாலை மூலம், தெய்வ நிலையத்துக்கு வரும் பசித்தோர், சன்மார்க்க அன்பர்களுக்கு மூன்று வேளை உணவு பரிமாறப்படுகிறது. தெய்வ நிலைய வளாகத்தில் தங்கியுள்ள 300-க்கும் மேற்பட்ட உறவற்றவர்களும் பசியாறி வருகின்றனர். உறவற்றவர்கள் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியோர் ஆவர். இவர்களின் நலன் கருதி அண்மை காலமாக காலையில் இஞ்சி கசாயமும், மாலையில் சுக்கு காப்பியும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தெய்வ நிலையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இலவச அக்கு பஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்படுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலர் க.நாகராஜன், கணக்கர் ஞானபிரகாசம் ஆகியோர் செய்துள்ளனர். தெய்வ நிலையத்தில் தங்கியுள்ள உறவற்றவர்கள் மற்றுமின்றி வெளி நபர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...