தடுப்புக் காவலில் 4 பேர் கைது
By DIN | Published On : 05th May 2019 12:08 AM | Last Updated : 05th May 2019 12:08 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல்: கடலூர் அருகே உள்ள பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் க.பாஸ்கரன் (40). டாஸ்மாக் ஊழியரான இவர், கடந்த மார்ச் 15-ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்புகையில் அவரை வழிமறித்து தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பண்ருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம், பெருமுக்கல் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாலா (27), செஞ்சி அருகிலுள்ள ஜெயம்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் பாலமுருகன் (26) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், செஞ்சி, திண்டிவனம், பண்ருட்டி ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
வழிப்பறி வழக்கு: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்அருங்குணத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் சங்கர் என்ற ஜெய்சங்கர் (39). இவர், கடந்த மார்ச் 25-ஆம் தேதி சொரத்தூரில் வழிப் பறியில் ஈடுபட்ட வழக்கில் முத்தாண்டிகுப்பம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருச்சி மாநகர அரசு மருத்துவமனை காவல் நிலையம், திருப்பாதிரிபுலியூர், முத்தாண்டிகுப்பம், காடாம்புலியூர் ஆகிய காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கஞ்சா விற்ற வழக்கு: புதுவை மாநிலம் தவளகுப்பத்தைச் சேர்ந்தவர் அருள் மகன் ஆனந்த் என்ற அனந்தராமன் (19). இவர், கடலூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்றபோது கடந்த ஏப்.3-ஆம் தேதிய திருப்பாதிபுலியூர் காவல் ஆய்வாளர் குமரய்யாவால் கைது செய்யப்பட்டார். இவர் மீதும், தவளகுப்பம் காவல்நிலையத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள், ஆயுத வழக்கு, கடலூர் மாவட்டம், ராமநத்தம் காவல்நிலையத்தில் 4 திருட்டு வழக்கு, பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளன.
எனவே, இவர்களது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டார். இதையடுத்து 4 பேரும் ஓராண்டுக்கு சிறையில் இருக்கும் வகையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.