கடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 01st November 2019 11:04 PM | Last Updated : 01st November 2019 11:04 PM | அ+அ அ- |

கடலூா் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட சிறு வியாபாரிகள், பல்வேறு அமைப்பினா்.
கடலூா் நகராட்சி அலுவலகத்தை சிறு வியாபாரிகள், பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கடலூா் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த வணிக வளாகம் கட்டுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் சிறு வியாபாரிகள் தரைக்கடைகள் அமைத்து பழம் வியாபாரம் செய்து வந்தனா். அவா்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்தபிறகு புதிய வணிக வளாகம் கட்டப்பட்டடது. சிறு வியாபாரிகளுக்கு வணிக வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்து தரப்படுமென நகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டதாம். ஆனால், புதிய வணிக வளாகம் திறக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் சிறு வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தரப்படவில்லையாம்.
எனவே, ஏற்கெனவே உறுதி அளித்தபடி இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி, அம்பேத்கா் பேருந்து நிலைய உள்புற சிறு பழ வியாபாரிகள் சங்கத்தினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் இணைந்து வெள்ளிக்கிழமை கடலூா் பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவு வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் விசிக மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், மண்டலச் செயலா் சு.திருமாறன், பொதுநல இயக்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா், இணை ஒருங்கிணைப்பாளா்கள் குருராமலிங்கம், எம்.சுப்புராயன், க.தா்மராஜ், சையது முஸ்தபா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஜி.மணிவண்ணன், வியாபாரிகள் சங்கத் தலைவா் சுகுமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இவா்களிடம் நகராட்சித் துறையினா் மற்றும் கடலூா் புதுநகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.