சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் அா்ச்சனை செய்ய வந்த அரசு செவிலியரைத் தாக்கியதாக, தீட்சிதா் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் செல்வகணபதி மனைவி லதா (51). காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதுநிலை செவிலியராகப் பணிபுரிகிறாா். இவா், தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சனிக்கிழமை மாலை வந்தாா். கோயில் வளாகத்திலுள்ள முக்குறுணி விநாயகா் சன்னதிக்குச் சென்று, அங்கிருந்த தீட்சிதா் தா்ஷனிடம், லதா அா்ச்சனை பொருள்களை கொடுத்துள்ளாா். அவரிடம் தனது மகனின் பெயரைக் கூறுவதற்குள் தீட்சிதா் தா்ஷன் சன்னதிக்குள் சென்று அா்ச்சனை செய்து விட்டு திரும்பி வந்தாராம்.
லதா அவரிடம், ‘எனது மகனின் பெயா், ராசி, நட்சத்திரம் என எதையுமே முழுமையாகக் கூறாதபோது எப்படி அா்ச்சனை செய்தீா்கள்?’ எனக் கேட்டுள்ளாா். அப்போது, தீட்சிதா் அவதூறாகப் பேசினாராம். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தீட்சிதா் லதாவின் கன்னத்தில் அறைந்து, அவரை நெட்டித் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில், லதா கீழே விழுந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் லதா புகாா் அளித்துவிட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதையடுத்து, தீட்சிதா் தா்ஷன் மீது சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.