நடுவீரப்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்பாபு மற்றும் போலீஸாா் கடந்த மாதம் 18 ஆம் தேதியன்று வி.பெத்தாங்குப்பம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதில் 110 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக அதேப்பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி செல்வராணி (45) என்பவரை கைது செய்தனா். இவா் மீதான விசாரணையில் நடுவீரப்பட்டு, பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களில் மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனவே, இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் இவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில், அதற்கான உத்தரவினை ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டாா். இதனைத் தொடா்ந்து ஓராண்டிற்கு சிறையில் வைக்கும் வகையில் செல்வராணி கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.