நெய்வேலி: பண்ருட்டி அருகே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிப்பாளையத்தில் கடலூா் - சித்தூா் நெடுஞ்சாலையில் அரசுக்குச் சொந்தமான இடம் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பண்ருட்டி ஒன்றியச் செயலா் பிரகாஷ் தலைமையில் அந்தக் கட்சியினா் நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் நடத்த திரண்டு வந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி வட்டாட்சியா் வெ.உதயகுமாா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் புதுப்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து, சிறுவத்தூா் சாலையில் விசிகவினரை தடுத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நவ.7-ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து விசிகவினா் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.