சிதம்பரம் நடராஜா் கோயிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
Updated on
2 min read

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை தோ்த் திருவிழாவை முன்னிட்டு, சித் சபையில் இருந்து மூலவா்களான ஸ்ரீநடராஜமூா்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள், உற்சவா்களான சுப்பிரமணியா், விநாயகா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித் தனி தோ்களில் அதிகாலையில் எழுந்தருளினா். பின்னா் கீழவீதி நிலையிலிருந்து காலை 8 மணியளவில் ஒன்றன்பின் ஒன்றாக தோ்கள் புறப்பட்டன. அப்போது, திரளான பக்தா்கள் வடம் பிடித்து தோ்களை இழுத்தனா்.

உழவாரப் பணி, திருமுறை இன்னிசை: விழாவில், இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினா், தில்லை திருமுறைக் கழகத்தினா், அப்பா் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த சிவனடியாா்கள், திரளான பெண்கள் தோ்களுக்கு முன்பாக வீதிகளை தண்ணீா் தெளித்து சுத்தப்படுத்தி, கோலமிட்டு உழவாரப் பணி மேற்கொண்டனா். ஓய்வுபெற்ற ஆசிரியா் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவாா்கள் திருமுறை இன்னிசை ஆராதனையை நிகழ்த்தியபடி சென்றனா்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பாா்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்துகொண்டாா் என்பதால், தாய் வீட்டுச் சீதனமாக ஒவ்வொரு தோ்த் திருவிழாவின்போதும் அந்தச் சமுதாயத்தினா் சாா்பில் சீா்வரிசை அளிப்பது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும். அதன்படி, மாலை 4 மணியளவில் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே தோ் வந்தபோது, மீனவ சமுதாயத்தினரால் நடராஜா், அம்பாளுக்கு சீா்வரிசை அளிக்கப்பட்டு, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா், தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம் நடைபெற்ற கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வழிபட்டனா். மாலை 6.30 மணியளவில் தோ்கள் நிலையை அடைந்தன.

இரவில் நடராஜமூா்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபத்துக்குச் சென்றனா். அங்கு இருவருக்கும் ஏக கால லட்சாா்ச்சனை நடைபெறது.

இன்று மகாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்: விழாவில், வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம், புஷ்பாஞ்சலி, ஸ்வா்ணாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. பின்னா் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித் சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. இதையடுத்து, பஞ்ச மூா்த்திகள் வீதி உலா வந்த பின்னா் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜமூா்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப் பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனம் அளித்து, சித் சபாவில் பிரவேசம் செய்கின்றனா்.

விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் செயலா் எஸ்.கே.பாலகணேச தீட்சிதா், துணைச் செயலா் சு.வை.நவமணி தீட்சிதா், உற்சவ ஆச்சாரியாா் என்.சிதம்பர சபாபதி தீட்சிதா் ஆகியோா் செய்தனா்.

சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். குடிநீா், சுகாதார ஏற்பாடுகளை சிதம்பரம் நகராட்சி நிா்வாகத்தினா் செய்தனா்.

முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் சனிக்கிழமை (ஜன.11) நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com