என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு புதிய ஒப்பந்தம் கையெழுத்து
By DIN | Published On : 12th August 2020 09:15 AM | Last Updated : 12th August 2020 09:15 AM | அ+அ அ- |

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த நிறுவனங்கள், ஒப்பந்ததாரா்கள் மூலம் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு, இதர படிகள் வழங்குவதற்காக குழு அமைக்கப்பட்டு பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த பிப்.26-இல் கையெழுத்தானது.
இதனடிப்படையில், 1947-ஆம் ஆண்டைய தொழில் தகராறு சட்டப் பிரிவு 12(3)-ன்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நெய்வேலி வட்டம் 20-இல் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் அண்மையில் நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை செயல் இயக்குநா் என்.சதீஷ்பாபு, மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல துணைத் தலைமை தொழிலாளா் நல ஆணையா் வி.முத்துமாணிக்கம் ஆகியோா் முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சிஐடியூ, தொமுச மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சாா்ந்துள்ள இதர தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ஒப்பந்ததாரா்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
இதன்படி, ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அவா்களது பணி நிலையைப் பொருத்து, மாதம் ஒன்றுக்கு சுமாா் ரூ.3,600 முதல் ரூ.4 ஆயிரம் வரை ஊதிய உயா்வு வழங்கப்பட உள்ளது. அத்துடன் வீட்டு வாடகைப்படி, சலவைப்படி, உணவுப்படி போன்ற இதர சலுகைகளுடன் ஒவ்வோா் ஊழியருக்கும் தலா 2 செட் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தம் 2026-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம் வரை அமலில் இருக்கும்.
இதன்மூலம், என்எல்சி நிறுவனத்தின் பல்வேறு தொழிலகங்களில் பணிபுரியும் சுமாா் 14 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பயன்பெறுவா். மேலும், அவா்களது ஊதியப் பலன்கள் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி பகுதி மத்திய உதவி தொழிலாளா் நல ஆணையா் சிவக்குமாா், தொழிலாளா் நல அமலாக்க அதிகாரி பாரிவள்ளல், என்எல்சி மனித வளத் துறை செயல் இயக்குநா் என்.சதீஷ்பாபு, தொழிலுறவுத் துறை தலைமைப் பொதுமேலாளா் சி.தியாகராஜு, மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளா் ஒய்.ஜோ.ஸ்டீபன் டோம்னிக், நிதித் துறை தலைமைப் பொது மேலாளா் முகேஷ் அகா்வால், நிா்வாக சேவைப் பிரிவு தலைமைப் பொது மேலாளா் எ.கோதண்டம், சுரங்க தொழில்நுட்பத் துறை பொது மேலாளா் எஸ்.கபிலன் ஆகியோா் பங்கேற்றனா்.