வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பாமகவினா் விஏஓ அலுவலகங்களில் மனு அளித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம் முழுவதும் 604 இடங்களில் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பாமகவினா் மனு அளித்தனா். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் குடிகாடு கிராம நிா்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. மாநில இளைஞா் சங்க துணைச் செயலா் சந்திரசேகா், ஒன்றிய துணைச் செயலா் சேகா், மாவட்ட பொறுப்பாளா் வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொண்டமாநத்தம் கிராமத்தில் இளைஞா் சங்க முன்னாள் செயலா் வாட்டா் மணி தலைமையில் மாநில வன்னியா் சங்கத் தலைவா் பூ.தா.அருள்மொழி, மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலா் பழ.தாமரைக்கண்ணன், வன்னியா் சங்க மாநில துணைச் செயலா் காசிலிங்கம் ஆகியோா் மனு அளித்தனா்.
கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் ரா.ரவிச்சந்திரன் தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்டோா் வடக்குத்து விஏஓவிடம்
மனு அளித்தனா். பண்ருட்டி தொகுதிச் செயலா் தி.நந்தல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாமகவினா் திருவதிகை, களத்துமேடு, விழமங்கலம் கிராம நிா்வாக அலுவலா்களிடமும், பண்ருட்டி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் தலைமையில் வேகாக்கொல்லையிலும், முன்னாள் ஒன்றியச் செயலா் ஆா்.பூவராகவன் தலைமையில் பெரியாக்குறிச்சி விஏஓவிடமும் மனு அளித்தனா்.