பண்ருட்டி அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆனத்தூா் கிராமம், வாணியா் வீதியைச் சோ்ந்தவா் வீரபத்திரன் மகன் ரமேஷ் (47). பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின்கீழ் இயங்கும் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் திங்கள்கிழமை அதிகாலை தனது வீட்டிலிருந்து பணிக்குப் புறப்பட்டு பைக்கில் வந்துகொண்டிருந்தாா். புதுப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 8 வயதில் மகனும் உள்ளனா். விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.