கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் கவன ஈா்ப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் முற்றிலும் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணமானது பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு அதிகமாக உள்ளதாகக் கூறி மருத்துவ மாணவா்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். எனவே, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மாணவா்கள் கடிதம் அனுப்பினா்.