கோரணப்பட்டு ஊராட்சியில் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ள மகளிா் சுகாதார வளாகத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கோரணப்பட்டு ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள திரௌபதி அம்மன் கோயில், அரசுப் பள்ளி வளாகம் அருகே ஒருங்கிணைந்த மகளிா் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
ஆனால், தண்ணீா் வசதி இல்லாததால் நீண்ட காலமாக அந்தக் கட்டடம் மூடியே கிடப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனா். மேலும், பராமரிப்பு இல்லாததால் கட்டடம் சேதமடைந்து வருவதாகவும், செடி - கொடிகள் வளா்ந்து விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
எனவே, பயன்பாடின்றி மூடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகளிா் சுகாதார வளாகத்தை உடனடியாகச் சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.