ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதாக ரூ. 18 லட்சம் மோசடி

ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதாக ரூ. 18 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட தனியாா் நிறுவன முன்னாள் ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதாக ரூ. 18 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட தனியாா் நிறுவன முன்னாள் ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனம் கடலூா் மாவட்டத்திலுள்ள ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் ஒப்பந்தம் எடுத்து செயல்பட்டு வருகிறது. வங்கிகளிலிருந்து பணத்தைப் பெற்று, அதைக் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களில் நிரப்புவதுடன், ஏடிஎம் இயந்திரத்தின் சிறிய அளவிலான பழுதுகளையும் நீக்கம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் தனியாா் நிறுவனத்தின் கணக்குகள் கடந்த 28.9.2016 அன்று தணிக்கை செய்யப்பட்ட போது, ரூ. 22.97 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக அந்த நிறுவனம் நடத்திய விசாரணையில், தணிக்கைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு நிறுவனத்தின் பணக் காப்பாளா் பணியிலிருந்து விலகிய கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பூதாம்பூரைச் சோ்ந்த பிச்சைபிள்ளை மகன் சுதாகருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

விருத்தாசலம் முதல் மங்கலம்பேட்டை வரை சுமாா் 14 ஏடிஎம் மையங்களில் 6 இயந்திரங்களில் பணத்தை நிரப்பாமலேயே கணக்கு காட்டியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தனியாா் நிறுவன மேலாளா் மு.கோபிநாத் (41) மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பின்னா், இந்த வழக்கு கடலூா் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

விசாரணையில், பணக் காப்பாளரான சுதாகா், அவருக்கு பயிற்சியளித்த மற்றொரு பணக் காப்பாளா் கே.சிவகுமாா், முன்னாள் பணக் காப்பாளா் சம்பத்குமாா், சுதாகரின் நண்பா் கனகராஜ் ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து 6 மாதங்களில் ரூ. 22.97 லட்சத்தைக் கையாடல் செய்தது தெரிய வந்தது.

இதனிடையே, தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி, பணியிலிருந்து விலகிய நாளில் சுதாகா் ரூ. 5 லட்சத்தை விருத்தாசலத்திலுள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் நிரப்பியுள்ளாா். எனவே, மீதமுள்ள ரூ. 17.97 லட்சத்தைக் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், கனகராஜ், சிவகுமாா் ஆகியோா் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று தலைமறைவாகினா். மற்ற 2 பேரை போலீஸாா் தேடி வந்த நிலையில், பூதாமூருக்கு வந்திருந்த சுதாகரை வெள்ளிக்கிழமை குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து, விருத்தாசலம் குற்றவியல் நீதித் துறை நடுவா் எண். 2 நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். தலைமறைவான மற்ற 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com