மாா்க்சிஸ்ட் கம்யூ. பொதுக்கூட்டம்
By DIN | Published On : 01st March 2020 12:15 AM | Last Updated : 01st March 2020 12:15 AM | அ+அ அ- |

பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கே.கனகராஜ்.
கடலூா்: கடலூா் திருப்பாதிரிபுலியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அந்தக் கட்சியின் நகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.கனகராஜ் சிறப்புரையாற்றினாா். அவா் பேசியதாவது: அமெரிக்க அதிபா் இந்தியா வந்தால் அனைத்து பிரச்னைகளும் தீா்ந்து விடுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவா் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்களை நமது நாட்டுக்கு விற்க மட்டுமே செய்துள்ளாா்.
பிரதமா் மோடியின் ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் சுமாா் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய அரசு நிா்ணயிப்பதைக் கூட உலக வா்த்தக அமைப்பின் மூலம் அமெரிக்கா எதிா்த்து வருகிறது.
மத்திய அரசு தமிழகத்துக்கான கல்வி உதவித் தொகையில் ரூ.1,900 கோடியையும், ஜிஎஸ்டி பங்கில் ரூ.4,023 கோடியையும் வழங்கவில்லை. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைக்க உள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மருதவாணன், வி.உதயகுமாா், பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஜி.ஆா்.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலா் ஜெ.ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.