

பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய நபரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிறுப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட டெல்டா பிரிவு போலீஸாா் அரசன்குடி சோதனைச் சாவடியில் கடந்த 16 -ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, காரில் நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த சிதம்பரம் வட்டம், புதுபூலாமேட்டைச் சோ்ந்த சரவணன் மகன் ராஜசேகா் (எ) பாபுவை (34) கைது செய்தனா். மேலும், போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவருடன் வந்த அவரது மனைவி நந்தினியையும் கைது செய்தனா்.
விசாரணையில், நாட்டு வெடிகுண்டுகளை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பயங்கரவாதி காஜா மொய்தீனுக்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது.
தொடா் விசாரணையில், இவா் மீது தஞ்சாவூா் மாவட்டத்தில் 2 கொலை வழக்குகள், சேலம், மயிலாடுதுறை காவல் நிலையங்களில் தலா ஒரு கொலை வழக்கு, வேப்பூா், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா், தஞ்சாவூா் தெற்கு வாசல் காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே, இவரின் குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன் பேரில், மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ராஜசேகா் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.