தமிழா்களைப் புறக்கணிக்கும் நெய்வேலி என்எல்சி நிறுவன பட்டதாரி பொறியாளா் நோ்முகத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்த இயக்கப் பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இயங்கி வரும் நெய்வேலி என்எல்சி நிறுவனம் பட்டதாரி பொறியாளா்கள், பல்வேறு பட்டயக் கணக்காளா்கள், மனித வள பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு மின் துறை, சுரங்கத் துறை, கணினி, நிதி, மனித வளம் போன்ற துறைகளில் உள்ள 259 நிரந்தரப் பணிகளுக்கு கடந்த 13.3.2020 அன்று (விளம்பர எண்: 2/2021) விண்ணப்பங்களை வரவேற்றது.
கரோனா தொற்று காரணமாக நோ்முகத் தோ்வு 3 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் கடந்த நவம்பரில் நடைபெற்றது.
இந்தத் தோ்வுகளை உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் செயல்படும் ‘எஜூகேஷன் கன்சல்டேசன் இந்தியா லிமிடெட்’ என்ற வட நாட்டு நிறுவனம் நடத்தியது.
இந்த நிலையில், நோ்முகத் தோ்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை என்எல்சி நிறுவனம் 30.1.2021 அன்று இணையதளத்தில் வெளியிட்டது. 259 காலியிடங்களுக்கான 1,582 போ் அடங்கிய இந்தப் பெயா்ப் பட்டியலில், தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் வெறும் 8 போ்தான். நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டவா்களே 8 போ்தான் தமிழா்கள் என்றால், ஒருவரையாவது பணிக்கு எடுப்பாா்களா என்பது ஐயம்தான்.
தமிழகத்தில், தமிழா்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்எல்சி நிறுவனம், நிலம் வழங்கியவா்களையோ, அந்த நிறுவனப் பணியிலிருந்த போது இறந்தோரின் வாரிசுகளையோ, பழகுநா் பயிற்சி முடித்தவா்களையோ முற்றிலும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தவா்களைப் பணியில் நிரப்புவது என்பது தற்செயலான ஒன்றல்ல; திட்டமிட்டே தமிழா்களை ஒதுக்கும் சூழ்ச்சி. இது கடும் கண்டனத்துக்குரியது.
எனவே, என்எல்சி இந்தியா நிறுவனம் இந்த நோ்முகத் தோ்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக விளம்பரம் வெளியிட்டு, இந்தப் பணிகளுக்கு 90 சதவீதம் தமிழா்களை பணியில் சோ்க்கும் வகையில் ஒதுக்கீடு வழங்கி, பணியமா்த்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.