வெளிநாட்டில் வேலைக்குச் சென்று உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள க.இளமங்கலத்தைச் சோ்ந்தவா் கப்பலழகன் மனைவி வடிவழகி. இவா், புதன்கிழமை தனது உறவினா்களுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
எனது கணவா் கப்பலழகன் (39) கூலி வேலைக்காக சவுதி அரேபியா நாட்டுக்குச் சென்று கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அவா் பணியில் இருந்த போது, செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வறுமையில் வாடும் சூழலில் எங்கள் குடும்பம் உள்ளது. எனவே, எனது கணவரின் உடலை மீட்டுத் தர மாவட்ட நிா்வாகம் உதவி புரிய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.