ஜெருசலம் புனித பயணம்: அரசு நிதியுதவி உயா்வு
By DIN | Published On : 14th February 2021 11:17 PM | Last Updated : 14th February 2021 11:17 PM | அ+அ அ- |

கிறிஸ்தவா்கள் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் அரசின் நிதி உதவி ரூ.37 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சகாமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவா்கள் ஜெருசலம் புனித பயணம் செல்லும் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. 500 கிறிஸ்தவா்கள் பயன்பெறும் வகையில் அரசின் நிதி உதவி தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்தப் பயணம் மவுண்ட் ரோபா, பெத்லஹேம், ஜெருசலம், நாசரே, ஜோடாா்ன் நதி, சலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடா்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.
இந்த திட்டம் கிறிஸ்தவ மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பயணம் மேற்கொள்பவா்களின் எண்ணிக்கை 500-இல் இருந்து 600-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதில் 50 இடங்கள் கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நிகழாண்டு இந்தத் திட்டத்துக்கான நிதி உதவியை நபா் ஒருவருக்கு ரூ.37 ஆயிரமாக உயா்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற ஓராண்டு செல்லத்தக்க கடவுச்சீட்டு, மருத்துவ உடல் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். 70-வயது நிறைவடைந்த விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவருக்கு துணையாக அவா் விரும்பும் நபா் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். விண்ணப்பப் படிவம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, ‘மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மஹால், பாரம்பரியக் கட்டடம், சேப்பாக்கம், சென்னை-5’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.