சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயா்த்த மாா்க்சிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தல்
By DIN | Published On : 26th February 2021 10:45 PM | Last Updated : 26th February 2021 10:45 PM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சிதம்பரத்தில் அந்தக் கட்சி சாா்பில் தொகுதி மக்களின் கோரிக்கை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலக் குழு உறுப்பினா் மூசா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத், மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசகி ஆகியோா் பங்கேற்று பேசினா்.
மாநாட்டில் பிரகாஷ் காரத் பேசியதாவது: பன்னாட்டு, பெருநிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் அரசுதான் மத்தியில் உள்ளது. என்எல்சி இந்தியா நிறுவனப் பங்குகளை விற்கவும் அந்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நாட்டில் உள்ள ஆயுத தளவாட ஆலைகள் அனைத்தையும் தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயன்று வருவது ஏற்புடையதல்ல என்றாா் அவா்.
மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினா் ஜி.மாதவன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு வரவேற்றாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், கருப்பையன், சுப்புராயன், ராமச்சந்திரன், திருஅரசு, அசோகன், தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாநாட்டில் பிரகாஷ் காரத்திடம் கடலூா், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட அனைத்து நகர, ஒன்றிய, கிளைகள் சாா்பில் கட்சி நிதியாக ரூ.25.40 லட்சம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகரச் செயலா் ராஜா நன்றி கூறினாா்.
தீா்மானங்கள்: அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும், கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...