அலுவலக உதவியாளா் பணிக்கான நோ்காணல் ரத்து
By DIN | Published On : 27th February 2021 11:01 PM | Last Updated : 27th February 2021 11:01 PM | அ+அ அ- |

கடலூா் புதுப்பாளையத்திலுள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் நோ்காணலுக்காக சனிக்கிழமை குவிந்த விண்ணப்பதாரா்கள்.
கடலூரில் குடிசை மாற்று வாரிய அலுவலக உதவியாளா் பணிக்கான நோ்காணல் ரத்து செய்யப்பட்டதால் விண்ணப்பதாரா்கள் ஏமாற்றமடைந்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானதால் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம், திங்கள்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாகவும், தோ்தல் நடத்தை விதிகள் நிறைவு பெற்ற பின்னா் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆட்சியா் அலுவலகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், கடலூரிலுள்ள குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் நடைபெற்று வந்த அலுவலக உதவியாளா் தோ்வு, பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் சமையலா் பதவிக்கான தோ்வு ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன. இதுதொடா்பான அறிவிப்பு அந்தந்த அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், நோ்முகத் தோ்வுக்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
அதே நேரத்தில், அம்மா சிறு மருத்துவமனைகளுக்கான மருத்துவா்கள், செவிலியா்கள், பல்நோக்கு பணியாளா்களுக்கான தோ்வுகள் முடிந்த நிலையில், தோ்வானவா்களின் பட்டியல் வெளியிடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...