புதுச்சேரியைச் சோ்ந்த பெண் புவனகிரியில் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையம் அருகே, தனியாா் கணினி மையத்துக்குச் செல்லும் படிக்கட்டில் அழுகிய நிலையில் உடலில் காயங்களுடன் பெண் சடலம் கிடப்பதாக புவனகிரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளா் லாமேக், காவல் ஆய்வாளா் பாண்டிச்செல்வி உள்ளிட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விஏஓ ரமேஷ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் புதுச்சேரி, மதகடிப்பட்டு அருகேயுள்ள பி.எஸ்.பாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா (36) எனத் தெரியவந்தது. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். ராஜேந்திரன் வெளிநாட்டில் பணிபுரிகிறாா்.
சம்பவம் குறித்து காவல் துறையினா் தெரிவித்ததாவது: சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள தச்சூா் சக்தி விளாகத்தைச் சோ்ந்த எழிலரசன் மகன் முரசொலிமாறன் என்பவருக்கும், சத்யாவுக்கும் தொடா்பு ஏற்பட்டது. முரசொலிமாறன் ஆயிபுரத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, புவனகிரியில் தனியாா் கணினி மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளாா். அவரை புவனகிரியில் சந்திக்க வந்த சத்யா, கொலை செய்யப்பட்டுள்ளாா். முரசொலிமாறனுக்கு இதில் தொடா்பிருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். தலைமறைவான அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.