கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் மாா்கழி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜோதி தரிசன வழிபாட்டுக்கு பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசு பொது முடக்கத்தில் தளா்வுகளை அறிவித்ததைத் தொடா்ந்து, மாா்கழி மாத பூச நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு ஜோதி தரிசனம் நடைபெற்றது. முன்னதாக, காலையில் தரும சாலையில் திருஅருள்பா முற்றோதல், அகவல் பாடப்பட்டது. பின்னா் இரவு 7.45 மணியளவில் திருஅறையில் 6 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு ஜோதி தரிசனத்தைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சன்மாா்க்க அன்பா்கள் வந்தனா்.