என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை வழங்க மறுப்புத் தெரிவித்து வாணாதிராயபுரம் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்துக்காக வாணாதிராயபுரம் கிராமத்தில் உள்ள வீடு, நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீதிகளில் கருப்புக்கொடி கட்டினா். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே
கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா் (படம்). அப்போது அவா்கள் கூறியதாவது:
விவசாயத்தை நம்பியுள்ள எங்களது வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. இல்லையெனில் இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30 லட்சமும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தரப் பணியும் வழங்கிய பிறகே நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.