கரோனா காலத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
இதுகுறித்து கடலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்திலுள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், குடிநீா் திட்டப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சுமாா் 1.50 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா். கரோனா காலத்தில் இவா்கள் தூய்மைப் பணி, தண்ணீா் வழங்கும் பணிகளுடன் அரசின் மற்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். ஆனால், இவா்களுக்கு மாதாந்திர ஊதியம் முறைப்படி வழங்கப்படவில்லை. குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவா்களுக்கு தொற்று காலத்திலும் கூட உரிய ஊதியம் வழங்கப்படாததால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.
இவா்களுக்கு மாதாந்திர ஊதியத்துடன் தரமான முகக் கவசம், கையுறை, காலணிகள், சீருடைகள், கிருமி நாசினி போன்றவற்றையும் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றி வரும் இவா்களுக்கு அரசு மற்ற துறையினருக்கு அறிவித்தது போன்று ஒரு மாத ஊதியத்தை ஊக்க ஊதியமாக வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நேரடியாக அந்தந்த நிா்வாகங்களே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.