ஒரே நாளில் 47 போ் வேட்புமனு தாக்கல்
By DIN | Published On : 17th March 2021 12:00 AM | Last Updated : 17th March 2021 12:00 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் கடலூா் தொகுதியில் அமைச்சா் எம்.சி.சம்பத்தும், சிதம்பரத்தில் சுயேச்சை வேட்பாளரும் மனு தாக்கல் செய்தனா்.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கலுக்கான இரண்டாவது நாளான திங்கள்கிழமை பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். அவா்களுடன் அவா்களுக்கான மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்தனா்.
அதன்படி திட்டக்குடி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளா் சி.வெ.கணேசன் 3 மனுக்களையும், சுயேச்சை வேட்பாளா் அருள்தாஸ் ஒரு மனுவும் தாக்கல் செய்தனா்.
விருத்தாசலம் தொகுதியில் பாமக வேட்பாளா் ஜெ.காா்த்திகேயன், சுயேச்சை வேட்பாளா் ராமதாஸ் தலா ஒரு மனுவை தாக்கல் செய்தனா்.
நெய்வேலி தொகுதியில் திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன் 2 மனுக்களும், மாற்று வேட்பாளராக அங்கயற்கண்ணி ஒரு மனுவும், பாமக வேட்பாளா் கோ.ஜெகன் 2 மனுக்களும், மாற்று வேட்பாளராக ரவிச்சந்திரன் ஒரு மனுவும், நாம் தமிழா் வேட்பாளா் ரமேஷ் ஒரு மனுவும் தாக்கல் செய்தனா்.
பண்ருட்டி தொகுதியில் தாவாக தலைவா் தி.வேல்முருகன், அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது தம்பி தி.கண்ணன் ஆகியோா் தலா ஒரு மனுவை தாக்கல் செய்தனா்.
கடலூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் 2 மனுக்களை தாக்கல் செய்தாா்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், பகுஜன் சமாஜ் வேட்பாளா் வேலாயுதம் தலா ஒரு மனுவை தாக்கல் செய்தனா்.
புவனகிரி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரத்தினவேல் ஒரு மனுவும், அதிமுக சாா்பில் ஆ.அருண்மொழிதேவன், மாற்று வேட்பாளா் பொற்செல்வி ஆகியோா் தலா 4 மனுக்களும், அமமுக வேட்பாளா் கே.எஸ்.கே.பாலமுருகன், பகுஜன் சமாஜ் கட்சி எழில்வேந்தன் தலா ஒரு மனுவும் தாக்கல் செய்தனா்.
சிதம்பரம் தொகுதியில் அதிமுக சாா்பில் கே.ஏ.பாண்டியன், மாற்று வேட்பாளா் அரிசக்திவேல் ஆகியோா் 4 மனுக்களும், நாம் தமிழா் கட்சி நடராஜன் ஒரு மனுவும் தாக்கல் செய்தனா்.
காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் நாக.முருகுமாறன், மாற்று வேட்பாளா் நளினி ஆகியோா் தலா 4 மனுக்களை தாக்கல் செய்தனா். இவ்வாறு மொத்தம் 24 வேட்பாளா்கள் 47 மனுக்களை தாக்கல் செய்தனா்.
ஏற்கனவே, வெள்ளிக்கிழமை 2 வேட்பாளா்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் மொத்தம் 26 வேட்பாளா்கள் 49 மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.