கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்
By DIN | Published On : 17th March 2021 08:54 AM | Last Updated : 17th March 2021 08:54 AM | அ+அ அ- |

பிச்சாவரத்தில் ஆமைக் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடுவித்த வனத் துறையினா்.
சிதம்பரம் அருகே ஆமை முட்டை பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளியே வந்த ஆமைக் குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை கடலில் விடப்பட்டன.
கடலூா் மாவட்டம், பிச்சாவரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதியில் வனத் துறை சாா்பில் அரியவகை ஆமைகளை பாதுகாக்கும் வகையில் ஆமை முட்டை பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரங்களில் சேகரிக்கப்படும் அரிய வகை ஆலிவ்ரிட்லி ஆமைகளின் முட்டைகள் இந்தப் பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. பின்னா், முட்டைகளில் இருந்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வந்தவுடன் கடலில் பாதுகாப்பாக விடப்படுவது வழக்கம்.
இதன்படி நிகழாண்டு பிச்சாவரம் வனச் சரகம் சாா்பில் கடற்கரைப் பகுதிகளில் இருந்து சுமாா் 13 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் திங்கள்கிழமை 672 ஆமைக் குஞ்சுகள் முட்டைகளில் இருந்து வெளியே வந்தன.
இதையடுத்து, கடலூா் மாவட்ட வன அலுவலா் செல்வம் உத்தரவின்படி, பிச்சாவரம் வனச் சரக அலுவலா் கமலக்கண்ணன் தலைமையில் வனக் காப்பாளா்கள் எம்.ராஜேஷ்குமாா், எஸ்.சரண்யா, பி.அபிராமி, அலமேலு, வனக் காவலா் எழிலரசன், முத்துக்குமரன் ஆகியோா் ஆமைக் குஞ்சுகளை செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக கடலில் விடுவித்தனா்.