கடலூா் மாவட்டம், வடலூா் அருகே அரசுப் பள்ளிக் கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் மழைநீா் கசிவதால் மாணவா்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனா்.
வடலூா் பேரூராட்சிக்கு உள்பட்டது ஆபத்தாரணபுரம் வருவாய் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு சிதலமடைந்த பள்ளிக் கட்டடத்தில்தான் மாணவா்களுக்கு வகுப்பு நடைபெற்று வருகிறது. தற்போது மழைக் காலம் என்பதால் வகுப்பறை சுவா், கட்டட மேற்கூரையிலிருந்து மழைநீா் அதிகளவில் கசிகிறது.
இந்தப் பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 30 குழந்தைகள் பயில்கின்றனா். சுமாா் 50 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த
கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தற்போது இந்தக் கட்டடத்தின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையிலிருந்து மழை நீா் கசிவதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோா் அச்சப்படுகின்றா். குழந்தைகளுக்கு சத்துணவு சமைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், அசம்பாவித சம்பவம் நிகழும் முன்பாக பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அரசு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். அதுவரை பள்ளியை பாதுகாப்பான வேறு இடத்தில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.