தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தமிழா்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நாம் தமிழா் கட்சியில் மாற்றுக் கட்சியினா் இணையும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்றுப் பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள நிலம், வளங்களை நாட்டின் வளா்ச்சிக்காக மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால், வேலைவாய்ப்புகளில் மட்டும் வட மாநிலத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நெய்வேலி பகுதியில் மின் இணைப்பின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். அவா்களின் வீடுகளுக்கு தமிழக அரசு மின் இணைப்பு பெற்றுத்தர வேண்டும்.
தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தமிழா்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பனை மரங்கள் வெட்டப்பட்டு கேரளத்தில் செயல்படும் செங்கல்சூளைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. பனை மரங்களிலிருந்து கள் இறக்கினால் விவசாயிகள் பயனடைவா். பனை மரங்களை வெட்டி விற்பவா்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.