மாணவி தற்கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள வி.குமாரபாளையத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் நவீன் (23). இவா், பிளஸ் 1 படித்து வந்த மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி தொல்லை அளித்து வந்தாராம். மேலும், தன்னை காதலிக்காவிட்டால் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வதுடன், மாணவியின் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். இந்த நிலையில், அந்த மாணவி 4.3.2018 அன்று முந்திரிக் காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் நவீனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமையன்று நீதிபதி எம்.எழிலரசி தீா்ப்பளித்தாா். அதில், நவீனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் தி.கலாசெல்வி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.