சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பரங்கிப்பேட்டை வளாகம் கடல்சார் உயிரியல் புலத்தின் பி.எப்.எஸ்சி., (இளங்கலை மீன் வள அறிவியல் பட்டப்படிப்பை), புது தில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் (ICAR), பி.எப்.எஸ்சி., படிப்புக்கான அங்கீகாரத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த படிப்பு நான்கு ஆண்டு தொழில்முறை பட்டப்படிப்பகும்.
பேராசிரியர் பி.அனந்தராமன், கடல்சார் அறிவியல் புலத்தின் முதல்வர் மற்றும் கடல் உயிரியல் இயக்குநர் பேராசிரியர் எம்.கலைசெல்வம் ஆகியோர் கூறுகையில், இந்த அங்கீகார தர நிலைகளை அடைவது, கல்வி நிலைகளுக்கான நமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.
மேலும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் அங்கீகாரம் காரணமாக கடல்சார் அறிவியல் புலத்திற்கும், இங்கு பயிலும் மாணவர்களுக்கு நிதி மற்றும் கட்டமைப்பிற்கான மத்திய அரசின் மானியமானது மற்ற வேளாண் மற்றும் மீன்வள பல்கலைக்கழகங்களுக்கு இணையாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட மீன்வள இளங்கலை படிப்பானது 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும், கிட்டத்தட்ட 160 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில விவசாய மற்றும் மீன்வள பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சில மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பி.எப்.எஸ்சி., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், துணைவேந்தர் முதுமுனைவர் இராம.கதிரேசன், பதிவாளர் முனைவர். கே. சீதாராமன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர்.மு. பிரகாஷ், தரகட்டுபாட்டு அதிகாரி முனைவர் எஸ்.அறிவுடைநம்பி ஆகியோருக்கு மேற்கண்ட அங்கீகாரம் பெற்று தந்தமைக்கு இனிப்பு வழங்கி நன்றி கூறினர்.
மேலும், அனைத்திந்திய வேளாண்மை மாணவர்கள் சங்கத்தின் (AIASA) செயலாளர் முனைவர் டி.பாலு மற்றும் போர்டோனோவோ (AIASA) மீன்வள பிரிவின் தலைவி செல்வி கே.கிருதுஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட அங்கீகாரம் 5 ஆண்டுகளுக்கு (2022-2027) வழங்கியதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள மத்திய, மாநில வேளாண்மை மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கு எந்தவித தடையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.