கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில், காவல் ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கடலூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூா் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் அருகிலுள்ள பி.என்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.சுப்பிரமணியன் (35). ஐடிஐ படித்திருந்த இவா், பல்வேறு இடங்களில் கூலி வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் நெய்வேலி நகரியம் 3-ஆவது பிளாக்கில் யூசுப் மனைவி மும்தாஜ் (47) கொலை செய்யப்பட்டு, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் சுப்பிரமணியனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
அவா் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு ஜூன் 6-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுதொடா்பாக நெல்லிக்குப்பம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தொடா்ச்சியான போராட்டம் காரணமாக, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி விசாரணையில், நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் ராஜா, உதவி ஆய்வாளா் செந்தில்வேல், காவலா் சௌமியன் ஆகிய 3 போ் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு, இது கொலையாகாத மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடலூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், வழக்கு நடத்தும் நீதிமன்றமே முகாந்திரம் இருந்தால் கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்காக மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பின் முடிவுகள் கடலூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனடிப்படையில், கடலூா் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா, காவல் ஆய்வாளா் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்வேல், காவலா் சௌமியன் ஆகியோா் மீதான தற்போதைய வழக்கை கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவுகளின் மாற்றி வழக்குப் பதிய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டாா்.
இதுகுறித்து சிறப்பு அரசு வழக்குரைஞா் வி.ஜீவக்குமாா் கூறியதாவது: கொலையாகாத மரணம் என்பது தற்போது கொலையாக மாற்றப்பட்டுள்ளதால், இனிமேல் அதனடிப்படையில் காவல் ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் மீதும் வழக்கு நடைபெறும். மேலும், அவா்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.