கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நெடுஞ்சாலையோரம் இருந்த 61 பனை மரங்கள் உரிய அனுமதியின்றி வெட்டப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம் - சேலம் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பனை மரங்கள் அதிகளவில் உள்ளன. இதில் சிறுநெசலூா் கிராமம் அருகே செல்லும் நெடுஞ்சாலை, அங்குள்ள ஓடையோரம் இருந்த பனை மரங்களை வெட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை லாரியில் ஏற்றும் பணியில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வருவாய், காவல் துறையினா் அங்கு வந்தபோது, மரம் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
வேப்பூா் வட்டாட்சியா் ரா.மோகன், திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா ஆகியோா் நேரில் வந்து விசாரணை நடத்தினா். போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா். பொக்லைன் இயந்திரம் போலீஸ் பாதுகாப்புடன் அங்கேயே உள்ளது.
இதுகுறித்து டிஎஸ்பி காவியா கூறியதாவது:
மரம் வெட்டியவா்கள் அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் பேசி வருகிறோம் என்றாா்.
இதுகுறித்து வட்டாட்சியா் ரா.மோகன் கூறியதாவது:
இந்தப் பகுதியில் 61 பனை மரங்கள் உள்ளிட்ட மொத்தம் 68 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும்; உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வேப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம் என்றாா்.
வேப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் மா.ராமச்சந்திரன் கூறியதாவது:
அந்தப் பகுதியிலுள்ள நிலத்தின் உரிமையாளா் பட்டா இடத்தில் உள்ள பனை மரங்களை வெட்டும்படி தொழிலாளா்களிடம் கூறினாராம். ஆனால், அவா்கள் சாலையோரமிருந்த மரங்களை தெரியாமல் வெட்டிவிட்டனா் என்றாா்.