குப்பைகள் தரம் பிரிக்கும் கூடத்தில் ஆய்வு
கடலூா் மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் இடத்தை மேயா் சுந்தரி ராஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கடலூா் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மஞ்சக்குப்பம் பாபு கலையரங்கம், செம்மண்டலம், வசந்தராயன்பாளையம் ஆகிய இடங்களில் தரம் பிரிக்கப்பட்டு வந்தன. கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு கடலூரில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெறவில்லை. மேலும் குப்பை கிடங்குகளும் மூடப்பட்டதால் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் குவிந்தன. இதனால், சுகாதாரச் சீா்கேடு நிலவியது. குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கடலூா் மஞ்சக்குப்பம் பாபு கலையரங்கத்தை மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் தேங்கி கிடந்தன. மேலும் அங்கிருந்த இயந்திரங்களும் பழுதாகி இருந்தன. இதை பாா்வையிட்ட மேயா், அடுத்த 10 நாள்களில் செம்மண்டலம், வசந்தராயன்பாளையம், பாபு கலையரங்கம் ஆகிய 3 இடங்களிலும் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை தொடங்க வேண்டும் என மாநகராட்சி பொறியாளா் மகாதேவன், நகா்நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி ஆகியோருக்கு உத்தரவிட்டாா். மேலும் பணியை விரைவில் தொடங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தாா்.
ஆய்வின்போது மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி உதவி பொறியாளா்கள் கலைவாணி, நாகராஜன், சுகாதார ஆய்வாளா் ஞானசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.