பூட்டிக்கிடக்கும் ஊராட்சி அலுவலகம்! நிா்வாகப் பணிகள் பாதிப்பு
By DIN | Published On : 17th June 2022 02:52 AM | Last Updated : 17th June 2022 02:52 AM | அ+அ அ- |

வடக்குத்து ஊராட்சி மன்ற அலுவலகம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பூட்டிக் கிடப்பதால் நிா்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்டது வடக்குத்து ஊராட்சி. ஊராட்சி மன்றத் தலைவராக அஞ்சலை, துணைத் தலைவராக சடையப்பன் மற்றும் மன்ற உறுப்பினா்கள் 9 போ் உள்ளனா். கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதுதொடா்பாக கடந்த 2 வாரங்களுக்கு முன்னா் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரி தலைமையில் விசாரணை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா், உறுப்பினா்கள் பங்கேற்றனா். ஆனால், தலைவா் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடக்குத்து ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது. இதனால் நிா்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வீட்டு வரி, தண்ணீா் வரி, தொழில்வரி செலுத்த வருவோா், குடிநீா் இணைப்பு பெற வருவோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.