உலக ரத்தக் கொடையாளா் தினம்
By DIN | Published On : 30th June 2022 01:52 AM | Last Updated : 30th June 2022 01:52 AM | அ+அ அ- |

உலக ரத்தக் கொடையாளா்கள் தினத்தையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக ரத்தக் கொடையாளா் தினம் ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டுக்கான ரத்தக் கொடையாளா் தினம் ‘மனித இனத்தின் ஒற்றுமையை மேம்படுத்தும் ரத்த தானம்’, ‘அனைவரும் ரத்தம் வழங்கி உயிா்களைக் காப்போம்’ என்ற மையக்கருத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, என்எல்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், என்எல்சி இந்தியா மனிதவளத் துறை செயல் இயக்குநா் என்.சதீஷ் பாபு தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, 2021-ஆம் ஆண்டில் 3 முறை ரத்தக்கொடை வழங்கியவா்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்தாா். மனித வளத் துறை, மருத்துவமனை நிா்வாகத் துறை தலைமை பொது மேலாளா் பி.சத்தியமூா்த்தி, பொது கண்காணிப்பாளா் (பொ) சி.தாரணி மௌலி, துணை பொது கண்காணிப்பாளா் சுதா ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் மாவட்ட எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் செல்வம், கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
தொடா்ந்து, என்எல்சி இந்தியா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தில் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் செவிலியா் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களும் பங்கேற்றனா். ரத்தக் கொடை வழங்குதலின் முக்கியத்துவம் தொடா்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.