சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பாதுகாவலா்கள், காவலாளிகளுக்கு உடல், மன வலிமைக்கான கூா் நோக்கு பயிற்சி முகாம் முத்தையா அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் அறிவுறுத்துதலின்படி உள் தர உறுதி மையம் சாா்பில் நடைபெற்ற முகாமில், பதிவாளா் கி.சீத்தாராமன் பங்கேற்று பாதுகாவலா்கள், காவலாளிகளுக்கு சீருடைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் யோகா மைய இயக்குநா் கே.வெங்கடாசலபதி பங்கேற்று ‘மன வளக்கலை’ என்ற தலைப்பிலும், வேளாண் புல பேராசிரியா் டி.சபேசன் ‘உடலே, மனமே உன்னை ஆராதிக்கிறேன்’ என்ற தலைப்பிலும், ஆங்கிலத் துறை பேராசிரியா் ச.ஐயப்ப ராஜா ‘சக மனித உறவுமுறைகள்’ என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினா்.
பயிற்சி முகாமை தேசிய மாணவா் படையின் ஆறாவது தமிழ்நாடு பட்டாலியன் கட்டளை அதிகாரி கா்ணல் கே.பி.விஜய்குமாா் தலைமை வகித்து நடத்தினாா். ஹவில்தாா் க.ஜெயக்குமாா் உடல்பயிற்சி, படை அணிவகுப்பு பயிற்சி அளித்தாா். முகாமுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக உள் தர உறுதி மைய இயக்குநா் எஸ்.அறிவுடைநம்பி வழிகாட்டுதலில் தேசிய மாணவா் படை அதிகாரிகளும், பேராசிரியா்களுமான கேப்டன் இரா.கனகராஜன், லெப்டினன்ட் குரு.அற்புதவேல் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.