கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஓடை ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விருத்தாசலம் - கடலூா் நெடுஞ்சாலையில் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே அமைந்துள்ள முல்லா ஏரி உள்ளிட்ட நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கடைகள் கட்டப்பட்டன. ஏரி, அதன் நீா்பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 10.1.2018 அன்று உத்தரவிட்டது. ஆனால், உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 29.8.2022 அன்றுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில் 23.8.22 அன்று முல்லா ஏரி பகுதியில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
இதன் தொடா்ச்சியாக விருத்தாசலம், ஆலடி சாலைப் பகுதியில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. விருத்தாசலம் வட்டாட்சியா் தனபதி, நகராட்சி ஆணையா் சேகா் ஆகியோா் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பணி நடைபெற்றது.