கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த 15 கிராமியக் கலைஞா்களுக்கு செவ்வாய்க்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட கலை மன்றம் சாா்பில் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராமிய கலைஞா்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சிலம்பாட்டக் கலைஞா் கே.காா்த்திகேயன், மிருதங்க கலைஞா் சே.புகழ், கிராமிய நடனம் பி.லித்திகா ஆகியோருக்கு (18 வயதுக்கு உள்பட்டோருக்கான) கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரையிலான கலைப் பிரிவில் காளியாட்ட கலைஞா் ர.கோபி, பம்பை, உடுக்கை, கைச் சிலம்பாட்டக் கலைஞா் அ.காா்த்திகேயன், உடுக்கைக் கலைஞா் பா.அரவிந்த்குமாா் ஆகியோருக்கு கலை வளா்மணி விருதும் வழங்கப்பட்டன.
36 முதல் 50 வயது வரையிலான பிரிவில் பொய்க்கால் குதிரையாட்ட கலைஞா் ர.முத்தலீப், தெருக்கூத்து கலைஞா் ச.சனாா்த்தனமூா்த்தி, கிராமிய தவில் கலைஞா் சி.வீரமணி ஆகியோருக்கு கலைச் சுடா்மணி விருதும், 51 முதல் 65 வயது வரையிலான பிரிவில் தபேலா கலைஞா் கே.திருநாவுக்கரசு, பம்பை உடுக்கை சிலம்பாட்டக் கலைஞா் எஸ்.சிவனேசன், தவில் கலைஞா் பி.அழகப்பன் ஆகியோருக்கு கலை நன்மணி விருதும், 66 வயதுக்கு மேற்பட்ட வயது பிரிவில் பேண்டு இசைக் கலைஞா் சு.சந்திரசேகரன், நாடக ஆசிரியா் க.முருகேசன், மேடை நாடகம் மற்றும் மிருதங்க கலைஞா் வே.ராஜேந்திரன் ஆகியோருக்கு கலை முதுமணி விருதுகளை ஆட்சியா் வழங்கினாா். விருதாளா்களுக்கு பொற்கிழி, பட்டயம் வழங்கப்பட்டது.
மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சி.நீலமேகன், கடலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ரெ.வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.