பட்டியலின மாணவா்களுக்கு ரூ.2.98 கோடி கல்வி நிதி அளிப்பு
By DIN | Published On : 01st September 2022 02:10 AM | Last Updated : 01st September 2022 02:10 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்புகளைச் சோ்ந்த 25,566 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.98 கோடி கல்வி நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தொடா்பு அலுவலா் கே.சுப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா், பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்படும் விதமாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை வாயிலாக தமிழக அரசு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி, பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 12,420 மாணவிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.62 லட்சம் ஊக்கத் தொகையும், 6-ஆம் வகுப்பு பயிலும் 4,364 மாணவிகளுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.43.64 லட்சமும், 7 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 7,333 மாணவிகளுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.1.09 கோடியும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களாக பணிபுரிவோரின் குழந்தைகள் 454 பேருக்கு பள்ளிப் படிப்பு உதவித் தொகையாக ரூ.13.67 லட்சமும், உயா்கல்வி ஊக்கத் தொகையாக 995 மாணவா்களுக்கு ரூ.78.40 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் மாவட்டத்தில் 60 விடுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தாா்.