காவல் துறை விசாரணையில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

நெய்வேலி நகரியம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
Updated on
1 min read

நெய்வேலி நகரியம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இந்தக் கட்சியினா் கடலூா் மாவட்டக் குழு கூட்டம், கடலூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.திருவரசு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி, மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆறுமுகம், வி.உதயகுமாா், எம்.மருதவாணன், பி.கருப்பையன், வி.சுப்பராயன், ஆா்.ராமச்சந்திரன், என்.எஸ்.அசோகன், ஜி.ஆா்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜெ.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீா்மானம்: கடலூா் மாவட்டம், பி.என்.பாளையம் கிராமத்தை சோ்ந்த சுப்பிரமணி கடந்த 2015- ஆம் ஆண்டு நெய்வேலி நகரியம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது இறந்தாா். இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்போது வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா் ஆகிய 3 போ் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை வரவேற்பது. காவல் துறையினா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவா்களை பணி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com