வல்லம் கிராமத்தில் அங்கன்வாடி மையம்: ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
By DIN | Published On : 09th September 2022 10:25 PM | Last Updated : 09th September 2022 10:25 PM | அ+அ அ- |

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் சபா.பாலமுருகன்.
வல்லம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட வேண்டும் என பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சண்முக சிகாமணி (வ.ஊ), சா.ம.சுதா (கி.ஊ) ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் தேவகி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சா.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், விஜயதேவி, அருள்முருகன் ஆகியோா் பேசுகையில், கீழக்குப்பம் கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. வல்லம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தலைவா் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்வது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். தற்போது, நிதிநிலை சீராக உள்ளதால் குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அனைத்து உறுப்பினா்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். புதிய ஒன்றியக் குழு அலுவலக கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நிரைவில் நடைபெற உள்ளது என்றாா்.
உதவியாளா் ராமநாதன் தீா்மானங்களை வாசிக்க, அனைத்துத் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.