

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆவணி மாத மகாபிஷேகம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டி மகா ருத்ர ஜபம், யாகமும் நடைபெற்றது.
உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் மூலவருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி, மாதங்களில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத மகாபிஷேகம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, உச்சிகால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்தியை கனக சபையில் எழுந்தருளச் செய்து மந்த்ர அட்சதை லட்சாா்ச்சனை நடைபெற்றது. பின்னா் யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ருத்ர ஜபம், ருத்ர கிரம அா்ச்சனை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மதியம் மகா ருத்ர மகா ஹோமம் தொடங்கி நடைபெற்றது. மாலையில் கலசங்கள் யாத்திரா தானம் செய்யப்பட்டன.
இதையடுத்து, சித் சபை முன் உள்ள கனக சபையில் மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை மகாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் உள்ளிட்டோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.