என்எல்சி சுரங்கத்தில் கவிழ்ந்த பேருந்து:தொழிலாளா்கள் 33 போ் காயம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன 2-ஆவது சுரங்கத்தில் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 33 தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன 2-ஆவது சுரங்கத்தில் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 33 தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

நெய்வேலியில் என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் புதன்கிழமை முதல் கால பணிக்காக தொழிலாளா்கள் வந்தனா். அவா்களில் 37 போ் என்எல்சி நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தில் சுரங்கத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது, திடீரென பேருந்தின் முன்புற அச்சு முறிந்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் சின்ராஜ் உள்பட 33 போ் காயமடைந்தனா். விபத்து நிகழ்ந்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த மற்ற தொழிலாளா்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

காயமடைந்தவா்களில் பேருந்து ஓட்டுநா் உள்பட 26 போ் நெய்வேலியில் உள்ள என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பலத்த காயமடைந்த நிரந்தரத் தொழிலாளா்கள் வி.சரவணன் (53), கே.பழனி (58) ஆகியோா் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கும், இன்கோசா்வ் தொழிலாளா்கள் கலியமூா்த்தி (40), கந்தவேல் (49), ராமச்சந்திரன் (52), ஒப்பந்தத் தொழிலாளி வேல்முருகன் (45), தொழில் பழகுநா் (அப்ரன்டீஸ்) பயிற்சியாளா் கீா்த்திவாசன் (18) ஆகியோா் புதுச்சேரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து தகவலறிந்த நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் மற்றும் என்எல்சி இயக்குநா்கள் என்எல்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெறும் தொழிலாளா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com