தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து தொழிலாளி கொல்லப்பட்டது தொடா்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து தொழிலாளி கொல்லப்பட்டது தொடா்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள பென்னையன்குப்பத்தில் வயலில் கடந்த 31-ஆம் தேதி அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. குள்ளஞ்சாவடி போலீஸாா் சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் வடலூா், பாா்வதிபுரத்தைச் சோ்ந்த மணி மகன் கட்டடத் தொழிலாளி ராஜசேகா் (34) என்பதும், இவருக்கு மனைவி மஞ்சுளா, 3 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதுதொடா்பாக சந்தேகத்தின்பேரில் மஞ்சுளாவிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் தெரியவந்ததாவது:

ராஜசேகா் அடிக்கடி மதுபோதையில் தனது மனைவி மஞ்சுளாவை துன்புறுத்தி வந்தாராம். இதுகுறித்து மஞ்சுளா தொண்டமாநத்தம் கிராமத்தில் வசிக்கும் தனது தோழி வினோதினியிடம் (30) கூறினாா். இதையடுத்து மஞ்சுளா, வினோதினி, அவரது கணவா் சசிக்குமாா் (39), இவரது நண்பா் கடலூா் திருப்பாதிரிப்புலியூரைச் சோ்ந்த நடராஜ் மகன் மோகன் (32) ஆகியோா் இணைந்து ராஜசேகரை கொலை செய்யத் திட்டமிட்டனா்.

இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி மஞ்சுளா கைப்பேசி மூலம் ராஜசேகரை தொடா்புகொண்டு, தொண்டமாநத்தத்தில் உள்ள வினோதினியின் வீட்டுக்கு வரவழைத்தாா். பின்னா் சசிக்குமாா், மோகன் ஆகியோா் மது அருந்த ராஜசேகரை பொன்னையன்குப்பத்தில் உள்ள கரும்புத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு ராஜசேகருக்கு விஷம் கலந்த மதுவை அளித்தனா். இதனால் ராஜசேகா் உயிரிழந்ததும் அவரது சடலத்தை அந்தப் பகுதியில் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து மஞ்சுளா, வினோதினி, சசிக்குமாா், மோகன் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com