காட்டுமயிலூா், மே.மாத்தூரில்10 மி.மீ மழை
கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்டுமயிலூா், மே.மாத்தூரில் 10 மி.மீ மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக இடியுடன் மழை பெய்தது. திங்கள்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றால் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன. ஒரு சில இடங்களில் பலா மரங்களும் சேதமடைந்தன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காட்டுமயிலூா், மே.மாத்தூா் பகுதிகளில் 10 மி.மீ மழை பதிவானது.
இதேபோல, பரங்கிப்பேட்டை 8.6, பண்ருட்டி, வேப்பூா் தலா 6, சேத்தியாதோப்பு 5.2, குறிஞ்சிப்பாடி 3.5, வடக்குத்து, வானமாதேவி, கடலூா் தலா 3, கடலூா் மாவட்ட ஆட்சியரகம் 1.9, அண்ணாமலை நகா் 1.7 மி.மீ மழை பதிவானது.