விருத்தாசலத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூா் கிழக்கு மாவட்ட பாஜகவினா் விருத்தாசலம் பாலக்கரை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
விருத்தாசலத்தில் திமுக நகா்மன்ற உறுப்பினா் பக்கிரிசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை சரியாகப் பதியப்படவில்லை. பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் பக்கிரிசாமிக்கு துணை போனவா்களையும் கைது செய்ய வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோவிலானூா் மணிகண்டன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சுரேஷ், பொருளாளா் ஜெனீத் மேகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் வினோஜ் பி.செல்வம் பங்கேற்றுப் பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜகவினா் திரளானோா் கலந்துகொண்டனா்.