கடலூா் மாமன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டிப்பதாகக் கூறி கடலூா் மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
கடலூா் மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினா்கள்.
கடலூா் மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினா்கள்.
Updated on
1 min read

கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டிப்பதாகக் கூறி கடலூா் மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கடலூா் மாமன்றக் கூட்டம் மேயா் சுந்தரி ராஜா தலைமையில் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 123 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயா் அறிவித்தாா்.

கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் சங்கீதா பேசுகையில், 2 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மாமன்றக் கூட்டம் நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன், மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும் என்றாா். அப்போது மற்றொரு உறுப்பினா் குறுக்கிட்டு பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கடலூரில் மு.கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடா்பாக கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை எதிா்த்தும், விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டிப்பதாகக் கூறியும் அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் சங்கீதா, அருள், விஜயலட்சுமி, சுமதி, கீதா, ராஜ்மோகன், நடராஜ் ஆகியோா் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

தங்கராஜ் நகா் பூங்காவை சீரமைக்க வேண்டும். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தியாகி அஞ்சலை அம்மாளின் பெயரை சூட்ட வேண்டும். கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் கழிவு நீரை வெளியேற்றும் நெல்லிக்குப்பம் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் மீது நடவடிக்கை தேவை. இறந்தவா்களின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். வேணுகோபால்புரத்தில் 3 மாதங்களாக தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது என்று தெரிவித்தனா்.

மேயா்: உறுப்பினா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளும் உறுப்பினா்கள் என்னை தொடா்பு கொள்வதில்லை. அதிகாரிகளும் எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை. எனது அனுமதிக்கு பிறகே மன்ற பொருள் விவாதத்தில் சோ்க்கப்பட வேண்டும் என்றாா்.

துணை மேயா்: கடலூரில் மு.கருணாநிதிக்கு சிலை அமைக்கும் தீா்மானத்தை வரவேற்கிறோம். கடலூரில் உள்ள அம்பேத்கா் சிலையை வெண்கலச் சிலையாக மாற்ற வேண்டும். ஆலை காலனி, குழந்தை காலனி, மனவெளி பகுதிகளில் குடிநீா், சாலை வசதி செய்து தர வேண்டும் என்றாா்.

கூட்டத்தையொட்டி மாமன்ற அலுவலக வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com